இன்று ஆவணி அமாவாசை! இன்னைக்கு இதையெல்லாம் நீங்க செஞ்சா ரொம்பவும் நல்லது!

மாதந்தோறும் தமிழ் மாதப்பிறப்பன்று முன்னோர்களை ஆராதனை செய்ய வேண்டும். அதேபோல், அமாவாசை நாள் என்பது, முன்னோர்களுக்கான நாள்.


முன்னோர்களை வழிபட்டு அவர்களுக்கான நம் கடமையை செய்யும் அற்புத நாள். இந்த நாளில், நம் முக்கியமான கடமையே பித்ருக்கள் எனப்படும் முன்னோர்களை வணங்குவதுதான். அந்த வகையில் ஆவணி மாத அமாவாசையான இன்று முன்னோர்கள் வழிபாட்டிற்கு மிகவும் உகந்த நாளாகும். 

அமாவாசையன்று சர்வகோடி லோகங்களிலுள்ள மகரிஷிகள் உட்பட அனைத்து தேவதைகளும், ஜீவன்களும், காலச்சென்ற நம்முடைய முன்னோர்களும் பூலோகத்திற்கு வந்து புண்ணிய நதிக்கரைகளிலும், கடலோரங்களிலும் காசி ராமேஸ்வரம், கயை போன்ற புண்ணிய தலங்களிலும் தர்ப்பண பூஜையை ஏற்றுக் கொள்கின்றனர். 

சில சடங்குகளுக்கும், சில வழிமுறைகளுக்கும் அமாவாசை சிறந்தது. அதில் ஒன்றுதான் பித்ரு தர்ப்பணம். முன்னோர்களில் மூன்று தலைமுறையினரின் பெயர்களாவது நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். நமது முன்னோர்களும், பெற்றோர்களும் ஏற்கனவே இறைவனடி சேர்ந்திருந்தால் அவர்கள் அனைவரின் ஆன்மாக்களும் நம்மை எங்கிருந்தோ ஆசீர்வதித்துக் கொண்டிருக்கும் என்பது நம்பப்பட்டு வரும் ஐதீகம்.

நமது முன்னோர்களின் ஆன்மாக்கள் நம்மைச் சுற்றி எங்கும் வியாபித்துக் கொண்டிருக்கிறது. அமாவாசை அன்று பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால், அவர்களின் அருளாசியால் எண்ணற்ற நன்மைகள் ஏற்படும். 

அமாவாசை அன்று முன்னோர்களுக்கு செய்யும் தர்ப்பணம் முடியும்வரை வீட்டு வாசலில் கோலம் போடுதல், பூஜை செய்தல் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். பித்ரு தர்ப்பணம் செய்து முடிந்த பின்னர், வீட்டில் பூஜையறையில் கோலம் போட்டு, தீபம் ஏற்றி மணியடித்து தெய்வ பூஜையை வழக்கம்போல் செய்யலாம். 

இன்று முன்னோரை ஆராதித்து தர்ப்பணம் செய்யுங்கள். அவர்களின் படங்களுக்கு பூக்களால் அலங்கரித்து, தீபதூபம் காட்டுங்கள். இந்த அமாவாசை நாளில், காகத்திற்கு மறக்காமல் உணவிடுங்கள். மேலும், நான்கு நபர்களுக்காவது முன்னோரை நினைத்து உணவு வழங்குங்கள். இதனால் பித்ருக்கள் குளிர்ந்து போவார்கள். உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் ஆசீர்வதிப்பார்கள். பித்ருக்கள் சாபமெல்லாம் நீங்கும். 

ஆவணி மாதம் சுப மற்றும் தெய்வீக காரியங்கள் செய்வதற்கான சிறப்பான மாதமாக இருக்கிறது. இந்த ஆவணி மாத அமாவாசை தினமான இன்று மேற்கண்ட முறையில் தர்ப்பணம் மற்றும் சிரார்த்தம் செய்து முன்னோர்களை வழிபடுவதன் மூலம் வீட்டில் தரித்திர நிலை நீங்கி சுபிட்சங்கள் பெருகும்.

தங்கள் வம்சத்தில் திருமணம் காலதாமதமாகும் நபர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். வீண் பண விரயங்கள் ஏற்படுவது நீங்கும். வெளிநாடு செல்லும் முயற்சிகள் வெற்றி பெறும். காரிய தடைகள் நீங்கும்.