கமலுக்கு ஐஎஸ் தீவிரவாதிகள் நிதி உதவி! கொளுத்திப்போட்ட அமைச்சர்!

மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசனுக்கு ஐஎஸ் தீவிரவாதிகள் நிதி கொடுப்பதாக சந்தேகம் இருக்கிறது என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளார்.


தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசினார். அப்போது அவர் கூறியதாவது: இந்து மதத்தை அவமதிக்கும் வகையில் கமல் பேசினால் எப்படி அமைதியாக இருக்க முடியும்? சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று கமல் கூறுவதை அனைவரும் ஏற்றுக் கொள்கிறீர்களா? இப்படி வாய்க்கு வந்ததை பேசும் கமல் நாட்டில் மத கலவரத்தை ஏற்படுத்த திட்டமிட்டு இருக்கிறார் என்று சந்தேகம் வருகிறது.

இதனால்தான் கமல் இப்படியே பேசிக் கொண்டிருந்தால் அவரது நாக்கை யாரேனும் இருப்பார்கள் என்று நான் பேசி விட்டேன். நாட்டின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று கமல் பேசியதை திரும்பப் பெற்றால் அவரது நாக்கை அறுப்பேன் என்று கூறியதையும் நான் திரும்பப் பெற்றுக்கொள்கிறேன். என்னை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க கமல் என்ன ஜனாதிபதியா அல்லது ஆளுநரா?

அமைதிப்பூங்காவான தமிழகத்தில் மதக் கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் கமல் ஏன் பேசினார் என்று விசாரிக்கப்பட வேண்டும். ஐஎஸ் தீவிரவாத அமைப்பிடம் இருந்து கமலுக்கு நிதியுதவி வருவதாக சந்தேகம் உள்ளது. இதனை மத்திய உணவுத்துறை விசாரித்து கண்டுபிடிக்க வேண்டும்.

இவ்வாறு பேசி செய்தியாளர்களை அதிர வைத்துள்ளார் ராஜேந்திர பாலாஜி.