கண் முன்னால் செத்து விழுந்த கட்டிய கணவன்..! வீடியோ காலில் பார்த்து அதிர்ந்த 3 குழந்தைகளுக்கு தாயான மனைவி! நெஞ்சை உலுக்கும் சம்பவம்!

வெளிநாட்டில் வேலைக்காகச் சென்ற கேரளாவைச் சேர்ந்த மூன்று குழந்தைகளுக்கு தாயான பெண் ஒருவர் வீடியோ காலில் தன் கணவருடன் பேசிக்கொண்டு இருந்த பொழுதே கணவன் செத்து மடிவதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.


பிஜுமோல் என்பவர் கேரளாவை சேர்ந்தவர் ஆவார். இவரது கணவர் பெயர் ஸ்ரீஜித். இருவருக்கும் திருமணம் நடைபெற்று மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். ஸ்ரீஜித் அரபுநாடுகளில் சுமார் 13 ஆண்டுகள் பணியாற்றி வந்தார். பின்னர் தனக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவால் நாடு திரும்பி தன் குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இதற்கிடையில் ஸ்ரீஜித்திற்கு எலும்பு புற்றுநோய் இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்து கூறியுள்ளனர். 

இதனால் குடும்பம் மிகுந்த ஏழ்மை நிலையை அடைந்துள்ளது. குடும்ப சூழ்நிலை காரணமாக அவரது மனைவி பிஜுமோல் சுற்றுலா விசாவில் தரகர் ஒருவர் மூலமாக துபாய் சென்றிருக்கிறார். துபாயில் அவருக்கு ஆயுர்வேத மருத்துவமனையில் வேலை வாங்கி தருவதாக கூறிய அவர் மசாஜ் சென்டருக்கு அழைத்துச் சென்று பணியாற்றும்படி கூறியிருக்கிறார். அந்த சூழ்நிலை சுத்தமாக பிடிக்காத பிஜுமோல் தன்னுடைய வேலையை விட்டு நின்று விட்டார். 

பின்னர் தரகரை தொடர்புகொள்ள முயற்சித்தும் அவரால் தொடர்பு கொள்ள முடியாததால் ஏமாற்றத்தில் பிஜுமோல் தன்னுடைய தோழி ஒருவருடன் அறையில் தங்கி வேறு வேலையை தேடிக் கொண்டிருந்தார். இதற்கிடையில் அவருடைய சுற்றுலா விசாவும் முடிவுக்கு வந்துள்ளது. ஆகையால் சட்டவிரோதமாக அந்த நாட்டில் தங்கக்கூடிய சூழ்நிலைக்கு பிஜுமோல் ஆளாகியிருக்கிறார். இதனையடுத்து அவரின் தோழியும் ஊர் திரும்பி விட்டார். தனியாக பிஜுமோல் துபாய் நாட்டில் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இதற்கிடையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. இதனால் சர்வதேச விமானங்கள் இந்தியாவிற்கு வருவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து செய்வதறியாது திகைத்து நின்று இருக்கிறார் பிஜுமோல். இதனை அடுத்து பிஜுமோல் கடந்த மார்ச் 23ஆம் தேதி தன்னுடைய கணவருக்கு வீடியோ கால் மூலம் பேசியிருக்கிறார். அந்த சூழ்நிலையில் அவரது கணவர் ஸ்ரீஜித் அமர்ந்து இருந்த நாற்காலியில் இருந்து தவறி கீழே விழுந்து அவரது மனைவி கண் முன்னே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார். கணவரின் இறுதி சடங்கிற்கு கூட பிஜுமோலால் வர இயலாததால் அதனையும் வீடியோ கால் மூலமாகவே பார்த்து கதறி அழுதிருக்கிறார்.

இன்னிலையில் பிஜுமோலின் நிலமையை பற்றி அறிந்த இந்திய தூதரகம் அவருக்கு நாடு திரும்புவதற்கு தேவையான உதவிகளை செய்து வந்தே பாரத் திட்டத்தின் அடிப்படையில் இந்தியாவிற்கு அழைத்து வந்தது. வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள் நாடு திரும்பியவுடன் தனிமைப் படுத்தப்பட்டு வரும் நிலையில் பிஜுமோலும் தன்னுடைய குழந்தைகளை பார்க்க இயலாமல் தனிமைப் படுத்தப்பட்டு உள்ளார். நாடு திரும்பினாலும் தன்னுடைய சொந்த மகளை பார்க்க முடியாத சூழ்நிலைக்கு ஆளாகியிருக்கிறார் பிஜுமோல். இந்த சம்பவம் கேட்போரின் நெஞ்சங்களை பதைபதைக்க வைக்கிறது என்று தான் கூற வேண்டும்.