திருப்பூரில் ஒரே சேலையில் தூக்கிட்டு கணவன் – மனைவி தற்கொலை! ஏன் தெரியுமா?

திருப்பூர் அருகே ஒரே சேலையில் கணவன் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


திருப்பூர் பல்லடம் மஹாலட்சுமி நகரை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவர் அருகில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் லாவண்யா என்கிற பெண்ணுக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் குழந்தை கிடையாது. இளம் தம்பதிகளான இருவரும் வீட்டில் தனியாக வசித்து வந்தனர். இவர்களுக்கு இடையே அவ்வப்போது சண்டை நடைபெறுவது வழக்கம் என்று அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கூறியுள்ளனர்.

   இந்த நிலையில் நேற்று காலை வெகு நேரம் ஆகியும் முத்துகிருஷ்ணன் – லாவண்யா வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. அதற்கு முதல் நாள் இருவரும் வெகு நேரம் சண்டையிட்டுக் கொண்டிருந்துள்ளனர். மேலும் வீட்டில் இருந்த பொருட்களையும் உடைக்கும் சப்தமும அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு கேட்டுள்ளது. முதல் நாள் இருவரும் சண்டை போட்ட நிலையில் மறு நாள் நீண்ட நேரமாக கதவுகள்  திறக்கப்படாத காரணத்தினால் அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

   இதனை அடுத்து அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். விரைந்து வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது முத்துகிருஷ்ணன் தனது மனைவி லாவண்யாவுடன் ஒரே சேலையில் தூக்கு போட்டு சடலமாக தொங்கிக் கொண்டிருந்தனர். இருவரும் எதற்காக சண்டையிட்டனர், எதற்காக ஒரே சேலையில் தூக்கு போட்டுக்  கொண்டனர் என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனிடையே தம்பதியினருக்கு ள் அடிக்கடி ஈகோ பிரச்சனை எழும் என்று உறவினர்கள் கூறுகின்றனர்.

   நான் சொல்வதைத்தான் கேட்க வேண்டும், நான் தான் பெரியவன் என்று முத்துகிருஷ்ணனும், இல்லை நான் சொல்வதை தான் கேட்க வேண்டும், நான் தான் படித்தவள் என்று லாவன்யாவும் அடிக்கடி சண்டையிட்டுக் கொள்வார்கள் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர். இது தான் தற்கொலைக்கு காரணமாக இருக்கும் என்றும் உறவினர்கள் கூறுகின்றனர். இருப்பினும் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.