தமிழகத்தின் நீண்டநாள் கோரிக்கையாக இருப்பது, பட்டாசு தொழிலாளர்களுக்கு அமைப்புசாரா நல வாரியம் வேண்டும் என்பதுதான். அந்த தொழிலாளர்களின் வாழ்க்கை பிரகாசம் அடையும் வகையில், இன்று நல வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
பட்டாசு தொழிலாளர்களுக்கு நல வாரியம்… 1.20 லட்சம் பேருக்கு நல்ல வாய்ப்பு - எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பு

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ தற்போது, உடலுழைப்பு தொழிலாளர்கள் நலவாரியத்தின்கீழ், பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்கள் தங்களது நலஉதவிகளை பெற்று வருகின்றனர். இதில், சுமார் 4 இலட்சம் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் வகையில்,
அவர்களுக்கென தனியே ஒரு நலவாரியம் அமைக்க வேண்டுமென்று மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் அவர்களும், மாண்புமிகு சட்டப்பேரவை உறுப்பினர்களும், விருதுநகர் மாவட்ட பட்டாசு மற்றும் தீப்பெட்டி தயாரிப்பு தொழில் அமைப்பை சேர்ந்தவர்களும் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் 4 இலட்சம் தொழிலாளர்களின் நலனை கருத்தில்கொண்டு, மாண்புமிகு அம்மாவின் அரசு பட்டாசு மற்றும் தீப்பெட்டி தயாரிப்பு தொழிலாளர்களுக்கென தனியே ஒரு அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியத்தை அமைக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.”
மேற்படி, தமிழ்நாடு பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்கள் நலவாரியம், மாண்புமிகு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அவர்களை தலைவராகவும், அரசு பிரதிநிதிகளாக செயலாளர், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, தொழிலாளர் ஆணையர் மற்றும் தொழிலக பாதுகாப்பு மற்றும் கூடுதல் இயக்குநர் ஆகியோரும் அலுவல்சாரா உறுப்பினர்களாக, வேலையளிப்போர் பிரதிநிதிகளாக பட்டாசு தொழிற்சாலை சார்பான பிரதிநிதி,
தீப்பெட்டி தொழிற்சாலை சார்பான பிரதிநிதி மற்றும் தொழிற் கூட்டமைப்பின் பிரதிநிதி ஆகியோரும், தொழிலாளர்கள் பிரதிநிதிகளாக பட்டாசு தொழிற்சாலை தொழிற்சங்கத்தின் பிரதிநிதி, தீப்பெட்டி தொழிற்சாலை தொழிற்சங்கத்தின் பிரதிநிதி மற்றும் பிற தொழிற்சங்க பிரதிநிதி ஆகியோர் அடங்கிய வாரியம் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு மற்றும் நலவாரியத்தில் ஏற்கனவே பதிவு செய்துள்ள 62661 பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்களை உறுப்பினர்களாக கொண்டு இந்நலவாரியம் தொடங்கப்படும். இன்றைய தேதியில் 1250 பட்டாசு தொழிற்சாலைகளும், 870 தீப்பெட்டி தொழிற்சாலைகளும் உரிமம் பெற்று இயங்கி வருகின்றன.
இதில், ஏறத்தாழ 1,20,000 தொழிலாளர்கள் இத்தொழிற்சாலைகளில் பணிபுரிந்து தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் அவர்கள் தெரிவித்துள்ளார். இத்தொழிற்சாலைகளில் பணிபுரியும் அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களும் அமைக்கப்படவிருக்கும் புதிய நலவாரியத்தில் உறுப்பினர்களாக சேர்ந்து பயன் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.