புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நல்ல செய்தி… எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்த ரேஷன் சீர்திருத்தம்.

மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களால் பொதுவிநியோகத் திட்டம் 330 கோடி ரூபாய் செலவில் கணினிமயமாக்கப்பட்டது.


அதன் தொடர்ச்சியாக புழக்கத்திலிருந்த குடும்ப அட்டைகளுக்கு பதிலாக ஆதார் எண் விவரங்களின் அடிப்படையில் மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கும் திட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 1.4.2017 அன்று துவக்கி வைக்கப்பட்டு, தற்போது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மின்னணு குடும்ப அட்டைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்கள் பொதுவிநியோகத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்களை, தங்களின் விருப்பத்திற்கேற்ப தமிழ்நாடு முழுவதும் எந்த ஒரு நியாயவிலைக் கடையிலும் பெறத்தக்க வகையில் குடும்ப அட்டைகளின் மின்னணு முறை மாநில அளவில் மேம்படுத்தப்பட்டுள்ளது.

பொது விநியோகத் திட்டத்தின் ஒருங்கிணைந்த மேலாண்மைக்கான மத்திய அரசின் திட்டத்தின் கீழ், குடும்ப அட்டைதாரர்கள் சொந்த மாநிலத்திலிருந்து இடம்பெயரும்போது, தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தின்படி உரிம அளவிலான உணவு தானியங்களை தேசிய அளவில் எங்கு வேண்டுமானாலும் பெறத்தக்க வகையில் “ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை” திட்டத்தினை தமிழ்நாட்டில் செயல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  

மேற்கூறிய திட்டத்தினை செயல்படுத்துவதற்கு ஏற்ப தற்போது நியாயவிலைக் கடைகளில் பயன்பாட்டிலுள்ள விற்பனை இயந்திரங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  

இதனைத் தொடர்ந்து, தேசிய அளவில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் தங்களது சொந்த மாநிலத்தைவிட்டு இடம்பெயரும்போது, தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தின்படி உரிம அளவிலான உணவு தானியங்களை தமிழ்நாட்டில் எங்கு வேண்டுமானாலும் பெறத்தக்க வகையிலும், புலம்பெயர் குடும்பங்கள் தாங்கள் ஏற்கனவே வைத்துள்ள குடும்ப அட்டை விவரங்களின் அடிப்படையில் உணவு தானியங்கள் பெறத்தக்க வகையிலும், “ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை” திட்டத்தினை தமிழ்நாட்டில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று துவக்கி வைத்தார்கள்.  

இத்திட்டம் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 32 மாவட்டங்களில் 1.10.2020 முதல் செயல்படுத்தப்படும். மேலும், தூத்துக்குடி, தஞ்சாவூர், விருதுநகர், இராமநாதபுரம், மற்றும் திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களில் 16.10.2020 முதல் செயல்படுத்தப்படும்.

இத்திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டிலிருந்து பிற மாநிலங்களுக்கு புலம்பெயரும் முன்னுரிமை குடும்ப அட்டைதாரர்கள் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின்படி தங்களுக்குண்டான உணவு பொருட்களை உடற்கூறு முறையிலான தகவல் உறுதிப்படுத்துதல் மூலம் இடம்பெயரும் மாநிலத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

பிற மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு இடம்பெயரும் குடும்ப அட்டைதாரர்கள், தாங்கள் ஏற்கனவே வைத்துள்ள குடும்ப அட்டையினை கொண்டு, தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தின்படி உரிம அளவிலான உணவு பொருட்களை மத்திய அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட விநியோக விலையில் தங்களின் வசிப்பிடத்திற்கு அருகாமையில் உள்ள நியாயவிலைக் கடைகளில் உடற்கூறு முறையிலான தகவல் உறுதிப்படுத்துதல் மூலம் பெறலாம். இதனால் புலம்பெயர் தொழிலாளர்கள் எந்தவித இடையூறுமின்றி உணவு தானியங்களை பெற்றுப் பயனடையலாம். 

தமிழ்நாட்டைச் சேர்ந்த குடும்ப அட்டைதாரர்கள் தொழில்நுட்ப காரணங்களினால் உடற்கூறு முறையிலான தகவல் உறுதிப்படுத்துதலை மேற்கொள்ள இயலாத நிலையில், தற்போதுள்ள மின்னணு குடும்ப அட்டை மற்றும் ஆதார் தொடர்புடைய கைப்பேசிக்கு வரும் கடவுச் சொல் , ஆதார் கார்டு மற்றும் தற்போதுள்ள குடும்ப அட்டை ஸ்கேனிங் பின்பற்றியும் அத்தியாவசியப் பொருள்களை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.