ஆங்கில வகுப்பின் பெயரால் அமோக வசூல்..? ஆசிரியர் என்றாலே அயோக்கியர்தானா?

அரசு பள்ளிகளில் ஆங்கில வகுப்பு நடத்துவதாகச் சொல்லி அடிக்கப்படும் கொள்ளை தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பதற்கு பதிலாக ஆசிரியர்கள் வெளியிட்டுள்ள பதிவு இது.


தமிழக பள்ளிக் கல்வித்துறையின் கீழ் 46,000  அரசுப் பள்ளிகளும் அரசு உதவிபெறும் பள்ளிகளும் உள்ளன. இவற்றில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 69 லட்சம். அரசுப்பள்ளிகளில் தமிழ்வழி பயில்வோருக்கு ஏற்கனவே கல்விக் கட்டணம் கிடையாது.  ஆங்கில வழி வகுப்புகள் தொடங்கப்பட்ட பிறகு கட்டணம் வசூலிக்கப்பட்டது. 6, 7, 8 வகுப்புகளுக்கு ரூ.200, 9, 10  வகுப்புகளுக்கு ரூ.250, 11, 12ஆம் வகுப்புகளுக்கு ரூ.500 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதன்படி வசூலிக்கப்பட்டது. 

இதனிடையே ஆங்கில வழி என்பதால் அரசுப்  பள்ளிகளில் கட்டணம் வசூலிப்பதா என்ற எதிர்ப்பு  எழுந்தது. அதைத் தொடர்ந்து இந்த மாதம் 2ம்  தேதியன்று சட்டமன்றத்தில் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆங்கில வழி வகுப்புகளுக்குக் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது, இதுவரையில் வசூலிக்கப்பட்ட பணம் திருப்பிக்கொடுக்கப்படும் என்று  அறிவித்தார். உடனே அது பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பாகவும் வெளியானது.

அந்த அறிவிப்பின்படி பெற்றோர்களிடம் பணத்தைத் திருப்பிக்கொடுத்த தலைமையாசிரியர்களும் உண்டு. திருப்பிக் கொடுக்காதவர்களும் உண்டு.  திருப்பிக் கொடுக்க மறுக்கிறவர்களும் உண்டு! திருப்பிக் கொடுக்காத தலைமை ஆசிரியர்களில் ஒரு பகுதியினர் வசூலித்த பணத்தை  தங்களது  பள்ளிகளில் பல்வேறு தேவைகளுக்காக பயன்படுத்துகின்றனர்.

குடிநீர் வசதிகளை ஏற்படுத்துவது, கழிப்பறைகளை சீர்ப்படுத்துவது, புதிய  மின்  விளக்குகளையும் விசிறிகளையும் பொருத்துவது, கணினிகளைச் சரிப்படுத்துவது  போன்ற  பணிகள் இந்தப் பணத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அரசாங்கமோ பள்ளிக்கல்வித்துறையோ  செய்ய முன்வராத இந்தப் பணிகளைத் தலைமை ஆசிரியர்கள் இவ்வழியில் தங்கள் பொறுப்பில் செய்வதற்கு, பணத்தை திரும்பப் பெற முடியாத பெற்றோர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்,  சக  ஆசிரியர்களும் துணை நிற்கின்றனர்.

மற்றொரு பகுதி தலைமையாசிரியர்களோ,  வசூலித்த பணத்துக்கு ரசீதும் கொடுக்கவில்லை, அந்தப் பணத்தை வைத்து இப்படிப்பட்ட பயனுள்ள பணிகளையும் மேற்கொள்ளவில்லை. இவர்களில் அரசாங்கம் முன்பு நிர்ணயித்ததைத் தாண்டி 300, 500, 1,000 என்று மூன்று  பிரிவுகளுக்கும் வசூலித்தவர்களும் இருக்கிறார்கள்.

இதற்கெல்லாம்  எதிர்ப்புத் தெரிவிக்க முடியாத ஆசிரியர்கள் ஒருபுறம் மௌனச் சங்கடத்து டன் பார்த்துக் கொண்டிருக்க, சிலர்  கூட்டுச் சேர்ந்து ஒத்துழைக்கிறார்கள். ஒரு மேல்நிலைப்பள்ளியில் சுமார் 1,000 பிள்ளைகள் படிக்கிறார்கள் என்றால் எவ்வளவு வசூலாகும்! அதிலிருந்து அதிகாரிகளுக்கு கப்பம் செலுத்துவதும் நடக்கிறதாம். அதற்கும் மேலே  போகிறதா என்பது பற்றி ஆராய வேண்டும். 

பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு செய்தியாக வெளியானது பல பெற்றோர்களுக்குத் தெரியவில்லை. செய்தியை அறிந்தும், போனால் போகட்டும்,  தனியார் பள்ளிகளை விட மிகக் குறைவான தொகைதானே என்று பலர் கண்டுகொள்ளாமல் விட்டிருக்கிறார்கள். சிறு தொகையானாலும் குடும்பச் செலவுக்கு உதவுமே என்ற எண்ணத்துடன்  பலர் பள்ளிக்குச் சென்று  தலைமை ஆசிரியரைச் சந்தித்துப்  பணத்தை திருப்பிக் கேட்டிருக்கிறார்கள்.  பல பெற்றோர்கள்  தங்களது குழந்தைகள் மூலமே கேட்டுவிட்டிருக்கிறார்கள்.

அந்தக்  குழந்தைகளுக்குக் கிடைத்ததெல்லாம், ‘படிக்கிறதை விட்டுட்டு இதிலே ஏன் தலையிடுறீங்க’ என்ற வசவும், ‘டி.சி. வாங்குறதுக்கு என்கிட்டதானே வந்தாகணும்’ என்பது போன்ற அச்சுறுத்தல்களும்தான். பல பள்ளிகளில் மாணவர்களின் உரிமைக்காக வாதாடும் ஆசிரியர் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள்.  அவர்களை மனதில்  வைத்துக்கொண்டு, ‘உங்களை யார் தூண்டி விட்டது, அவரா. இவரா...’ என்று மிரட்டியிருக்கிறார்கள் சில தலைமை ஆசிரியர்கள். சில இடங்களில் துணிச்சலாகக் கேள்வி கேட்ட குழந்தைகளை மட்டும் அழைத்துப் பணத்தைக் கொடுத்தனுப்பியிருக்கிறார்களாம்.

தொகை பெரியதா, சிறியதா என்பது பிரச்சனையே இல்லை. அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அப்பட்டமாக மீறப்படுகிறது. ஏழைப்  பெற்றோர்களும் மாணவர்களும் ஏய்க்கப்படுகிறார்கள். கல்வியின் பெயரால் பெரியதொரு ஊழல் நடக்கிறது. “அட, அரசுப் பள்ளி தலைமையாசிரியராக இருந்துகொண்டே இவ்வளவு வருமானம் சேர்க்க முடியும் என்று வழிகாட்டுகிறார்களே,” என்று பெருமைப்படுகிற விசயமும் அல்ல இது.

அரசுப் பள்ளி இயக்கத்தின் மாண்பைச் சீர்குலைக்கிற இத்தகைய நெறியற்றோரைக் கண்டுபிடித்து, முறைகேடுகள் முற்றுவதற்குள் முற்றுப்  புள்ளி வைக்க வேண்டிய பொறுப்பு பள்ளிக் கல்வித்  துறைக்கு இருக்கிறது, அரசுக்கு இருக்கிறது. துறையையும் அரசையும் அசைய வைக்கிற பொறுப்பு  கல்வி உரிமை இயக்கங்களுக்கு இருக்கிறது.