அரசுக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்த போராளிகளின் குடும்பத்திற்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு வகையில் உதவிகள் செய்திருக்கிறார்.
ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு, கருணை காட்டி பேருதவி செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை எதிர்ப்பு போராட்டத்தின் போது உயிரிழந்த அந்தோணி செல்வராஜ் அவர்களின் மகன் செல்வன் அ.அஜய் ஜோன்ஸ்க்கு கருணை அடிப்படையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில், தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலகில், கிராம உதவியாளர் பணியிடத்திற்கான பணிநியமன ஆணையினை வழங்கினார்கள்.
அதேபோன்று, ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை எதிர்ப்பு போராட்டத்தின்போது, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 20 இலட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 5 இலட்சம் ரூபாயும் மற்றும் லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ஒன்றரை இலட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் உயிரிழந்த அந்தோணி செல்வராஜ் என்பவரின் மகன் செல்வன் அஜய் ஜோன்ஸ், அரசு வேலை பெறுவதற்குரிய 18 வயதினை தற்போது எய்தியதால், அவருக்கு இன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில், தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலகில் கிராம உதவியாளராக பணி புரிந்திட கருணை அடிப்படையில் பணிநியமன ஆணையினை வழங்கி ஆறுதல் கூறினார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடமிருந்து பணிநியமன ஆணையினை பெற்றுக் கொண்ட செல்வன் அஜய் ஜோன்ஸ், தனது குடும்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, நிதியுதவியும், அரசு பணிக்கான பணிநியமன ஆணையும் வழங்கியமைக்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு தனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.
இதன்மூலம், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணையின்படி, ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை எதிர்ப்பு போராட்டத்தின் போது உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்கள் அனைவருக்கும் அரசுப் பணி வழங்கப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.