கர்ப்பிணிகளுக்கான கடமைகள் என்னன்னு தெரியுமா - ஆரோக்கிய குழந்தை பெற ரூபெல்லா தடுப்பூசி போட்டாச்சா - வயிற்றுக்குள் குழந்தை உதைக்குமா

குழந்தையை ஆரோக்கியமாக பெற்றெடுக்கவேண்டும் என்று கர்ப்பிணி ஆசைப்படுவது மட்டும் போதாது. தனக்குள் வளரும் சிசுவை வளர்க்கவும் வரவேற்கவும் தயாராக இருக்கவேண்டும்.


·         கர்ப்பத்தின்போது இதயம், கல்லீரல் போன்ற உறுப்புகள் அதிகம் இயங்குகின்றன. அதனால் இந்த உறுப்புகளுக்குத் தேவையான ஊட்டச்சத்துள்ள உணவுகளை கர்ப்பிணி எடுத்துக்கொள்ள வேண்டும்.

·         கோபம், ஆத்திரம், மன உளைச்சல் போன்றவை மனநிலையைக் கெடுத்து உடலுக்கும் ஆரோக்கிய கேடு உண்டாக்கும்.

·         சுவாசப்பயிற்சி அல்லது நடை போன்ற உடற்பயிற்சிகளை மேற்கொள்வதால் நரம்பு மற்றும் ரத்தவோட்டம் சீராக இருக்கும்.

·         எப்போதும் ஓய்வாக இருந்தால் உடல் பருமன் ஏற்பட்டு மலச்சிக்கல் போன்ற பல பிரச்னைகளுக்கு ஆளாக வேண்டியிருக்கும்.

அதனால் கர்ப்பிணிக்கு நிம்மதியான வாழ்க்கையை இந்த நேரத்தில் ஏற்படுத்தித் தரவேண்டியது குடும்பத்தார் கடமை. நல்ல தூக்கம், உணவுடன் ஆரோக்கியத்தை பாதுகாத்துக்கொண்டால், குழந்தை பிறப்பு எளிதாக இருக்கும்.

 ஆரோக்கிய குழந்தை பெற ரூபெல்லா தடுப்பூசி போட்டாச்சா?

முந்தைய காலங்களில் மன வளர்ச்சி குன்றிய மற்றும் ஊனமுற்ற குழந்தைகள் பிறப்புக்கு மருத்துவர்களின் தவறான சிகிச்சையே காரணம் என்ற எண்ணம் மக்களிடம் இருந்தது. இது தவறு என்று இன்றைய நவீன மருத்துவம் நிரூபித்துவிட்டது.

·         திருமணத்துக்கு ஒரு பெண்ணை தயார் படுத்தும் பெற்றோர்கள், அவளை குழந்தை பேறுக்கு தயார் செய்யாததுதான் முக்கிய காரணம்.

·         பொதுவாகவே பெண் பிள்ளைகளுக்கு 10 வயது முடிந்ததும் ரூபெல்லா தடுப்பூசி போடுவது மிகவும் நல்லது.

·         10 வயதில் போடவில்லை என்றாலும் திருமணத்திற்குப் பிறகு தாயாக தயாராகும் முன்பு ரூபெல்லா போட்டுக்கொள்வது அவசியம்.

·         அம்மை, பொன்னுக்குவீங்கி போன்ற நோய்களால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நிச்சயம் ரூபெல்லா தடுப்பூசி போட வேண்டும்.

இந்த தடுப்பூசி காரணமாக மன வளர்ச்சி குன்றிய குழந்தை பிறப்பதை தடுக்க முடியும். மேலும் காது, கண், இதய கோளாறுகள் ஏற்படாமலும் பாதுகாக்க முடியும்.

  வயிற்றுக்குள் குழந்தை உதைக்குமா?

வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி பறக்கும் சுகத்தை அனுபவிப்பதற்கு கர்ப்பிணி பெண்ணால் மட்டுமே முடியும். ஆம், கருப்பைக்குள் குழந்தையின் அசைவுகளை அனுபவிக்கும்போதுதான் பெண்ணுக்கு, தாய்மை சுகம் புரியவரும்.

·         பொதுவாக 18 முதல் 20வது வாரத்தில் வயிற்றுக்குள் குழந்தையின் அசைவை தாயினால் உணரமுடியும்.

·         28வது வாரத்தில் இருந்து குழந்தையின் அசைவை மிகவும் நன்றாக உணரவும், வயிற்றுக்கு மேல் பார்க்கவும் முடியும்.

·         குழந்தையின் அசைவை அறிந்துகொள்வதற்கு தினமும் ஒரு மணி நேரமாவது ஒதுக்கவேண்டும்.

·         சாப்பிட்டு ஒரு மணி நேரம் கழித்து ஒருக்களித்துப் படுத்தபடி வயிற்றில் அசைவு தெரிகிறதா என்று கண்காணித்தால், நிச்சயம் அசைவை கண்டுபிடிக்க முடியும்.

குழந்தை வயிற்றில் தூங்கிக்கொண்டிருந்தால் அசைவு இருக்காது, அதனால் வேறு ஏதேனும் ஒரு நேரத்தில் அசைவை அறிய முயற்சிக்க வேண்டும். குழந்தையின் அசைவுதான் உதைப்பதுபோல் தெரியுமே தவிர, எந்தக் குழந்தையும் உதைப்பதில்லை.