தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தேமுதிக அலுவலகத்தையும், தனது கல்லூரியையும் பயன்படுத்திக் கொள்ளுமாறு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக தேமுதிக அலுவலகத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள்! விஜயகாந்த் அதிரடி அறிவிப்பு!
உலகமெங்கும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் இந்தியா, அமெரிக்கா,இத்தாலி உட்பட பல்வேறு நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 600-க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதுவரை தமிழகத்தில் 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கொரோனாவால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி அளிக்கும் வகையில் ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியையும், சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி அளிக்கும் வகையில் தேமுதிக அலுவலகத்தையும் தமிழக அரசு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அந்த அந்த வார்டில் உள்ள தேமுதிக நிர்வாகிகள் அத்தியாவசிய பொருட்களான உணவு, காய்கறி, உடை, மருந்து, முகக் கவசம் போன்றவற்றை வாங்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.