அமாவாசை இரவு கொண்டாடப்படும் சியாமா பூஜை! இதுதான் வங்காள தீபாவளியாம்!

தீபாவளி பண்டிகை ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமாக கொண்டாடுகிறார்கள்.


அந்த வகையில் வங்காளத்தில் கொல்கத்தா காளி பூஜை மிகப்பிரபலம். நவராத்திரி காலங்களில் கொண்டாடப்படும் காளி பூஜையை போல வங்காளத்தில் தீபாவளி அன்று ஒவ்வொரு வீட்டிலும் வண்ண வண்ண கோலங்கள் இட்டு வரிசையாக விளக்குகள் அலங்கரித்து வழிபடுவது வழக்கம்.

இது ஒரு சமூக விழாவாக கொண்டாடப்படுகிறது. திறந்தவெளியில் பெரிய மைதானத்தில் சுமார் 20 அடி உயரத்தில் நீல நிறக் காளியை எழுந்தருளச் செய்து பூஜை செய்வர். தீபாவளி பண்டிகையை ஒட்டி ஐப்பசி அமாவாசை அன்று நள்ளிரவில் மக்கள் அனைவரும் ஒன்றுகூடி காளி பூஜையில் கலந்து கொள்வார்கள்.

அன்றிரவு முழுவதும் பட்டாசு வெடிகள் வெடிக்கும். வண்ண வண்ண வாண வேடிக்கைகளும் நடைபெறும். இந்த வாணவெடிகள் ஒளியில் அமாவாசை இரவு பகல் போல் பிரகாசமாக தெரியும். இது குறித்து அவர்கள் கூறும் காரணம் சற்று வித்தியாசமானது.

தேவர்களுக்கு எப்படி உத்தராயணம் பகல் காலம், தட்சிணாயனம் இரவு காலம் என்று இரு பிரிவுகளாக குறிப்பிடப்படுகிறதோ அதேபோல் மறைந்த முன்னோர்களுக்கு ஐப்பசி அமாவாசை அன்று இரவு நேரம் தொடங்குகிறதாம். அதாவது மறைந்த ஆத்மாக்களுக்கு அன்று முதல் ஆறு மாதங்கள் தூக்கத்தைத் தரும் காலமாக கருதப்படுகிறது.

இதனால் வீடுகளில் வரிசையாக அலங்கரிக்கப்படும் தீபங்களும், உயரமான இடத்தில் ஏற்றி வைக்கும் பெரிய அளவிலான தீபங்களும் இரவில் வழி தெரியாமல் தவிக்கும் பிதுர்களுக்கு வழிகாட்டும். அதனால்தான் உயரமான மூங்கில் கம்பங்களை ஊரின் பல இடங்களில் நட்டு அவற்றின் உச்சியில் தீபம் ஏற்றி ஆகாச தீபம் அமைக்கும் வழக்கம் உள்ள்து. இன்றும் இந்த வழக்கம் வங்க கிராமங்களில் கடைபிடிக்கப்படுகிறது.

தீபாவளி அமாவாசை நள்ளிரவில் நடைபெறும் நாளில் காளி பூஜையால் வ்ரவிருக்கும் ஆபத்துக்கள் தவிர்க்கப்படுகிறதாம். அந்த நாளில் காளி தேவியை பயபக்தியுடன் பிரார்த்தனை செய்தால் வருடம் முழுவதும் எந்தவித ஆபத்துக்கள், தடைகள் நேராவண்ணம் காளிதேவி காப்பாற்றுவதுடன் நல்லதே தருவாள். எடுத்த காரியங்கள் வெற்றியடையும். ஆரோக்கியமுடனும், வளமுடனும் வாழ காளி தேவி அருள் புரிவாள் என்பது ஐதிகம்.

அனைவரும் ஒன்று கூடி வழிபடும் காளிதேவியின் மூர்த்தங்கள் நீல நிறத்தில் அமைந்திருக்கும். இந்த காளி சாந்தமான திருமுகத்துடன் காட்சி அளிப்பாள். (நவராத்திரி காலங்களில் வழிபடப்படும் காளி கருப்பு நிறத்தில் காட்சி தருவாள். முகத்தில் சற்று ஒரு உக்கிரகம் தெரியும்)

இதனை சியாமா பூஜை என்று போற்றுவர். இந்த பூஜையே வங்காளத்தில் தீபாவளியாகும். அன்று விடியற்காலையில் நீராடி புத்தாடை அணிந்து வீடுகளிலும் பூஜை செய்வர். ஐந்து நாட்கள் கழித்து மைதானத்தில் எழுந்தருளச் செய்திருக்கும் பெரிய காளியின் திருவுருவை அருகிலுள்ள நீர் நிலையில் விசர்ஜனம் செய்வர்.