கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்த??? சித்த மருத்துவர் தணிகாவுக்கு விரைவில் ஜெயிலில் களி..! ஏன் தெரியுமா?

கொரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக கூறி தவறான செய்தியை பரப்பி வருவதாக சித்த மருத்துவர் திருத்தனிகாசலம் என்பவர் மீது இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குனர் அவர்களால் சென்னை காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


கடந்த மார்ச் மாதம் முதலே இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவ ஆரம்பித்தது. இந்தியாவில் மெதுவாக பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் தொற்று நாட்கள் செல்ல செல்ல தொற்று பரவும் வேகம் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதனால் இந்தியாவில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து மற்றும் தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகள் வேகமாக நடைபெற்றுக் கொண்டு வருகிறது. 

இந்நிலையில் சென்னையில் ரத்னா சித்த மருத்துவமனையின் மருத்துவர் திருத்தணிகாசலம் என்பவர் வெளிநாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று பரவ ஆரம்பித்ததிலிருந்தே கொரோனா வைரஸ் தொற்றுக்கு தாம் மருந்து கண்டுபிடித்து விட்டதாக கூறி வியப்பை ஏற்படுத்தி வந்தார். அதுமட்டுமல்லாமல் தாம் கண்டுபிடித்த மருந்தை எடுத்துக்கொண்டாள் மிக விரைவாக கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடையலாம் என்றும் அவர் கூறிவருகிறார். 

மைய மற்றும் மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி தகுதியோ, முறையான அங்கீகாரமோ , பதிவோ இல்லாமல் சென்னை ஜெய் நகர் , கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரே உள்ள ரத்னா சித்த மருத்துவமனையின் மருத்துவர் திருத்தணிகாசலம் என்பவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக கூறி ஊடகங்கள் , பத்திரிகைகள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக தவறான செய்தியை பரவவிட்டு மக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வருவதாக கூறி அவர் மீது உடனடியாக உரிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து சட்டரீதியாக தக்க நடவடிக்கை எடுக்க இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குனர் அவர்கள் சென்னை காவல் துறையிடம் புகார் அளித்துள்ளார். இதனால் அவர் மீது விரைவில் காவல்துறை கைது நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.