கருத்து வேறுபாடு! இயக்குனர் பாலாவை பிரிந்து சென்றார் மனைவி முத்துமலர்?

கருத்து வேறுபாடு காரணமாக இயக்குனர் பாலாவை அவரது மனைவி முத்துமலர் பிரிந்து சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.


சேது படம் மூலம் தமிழ் திரையுலகில் புரட்சியை ஏற்படுத்தியவர் பாலா. அந்த படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் விக்ரமுக்கு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தார். இதன் மூலம் விக்ரம் முன்னணி நடிகராக உள்ளார். இதே போல் சூர்யாவை நந்தா திரைப்படம் மூலம் நடிக்கத் தெரிந்த நடிகராக அறியச் செய்தார் பாலா. தொடர்ந்து பிதாமகன், நான் கடவுள் என வித்தியாசமான படங்களை தந்தவர் பாலா.

தனது துணிச்சலான பேட்டி, வெளிப்படையான கருத்துகள் மூலமும் பாலாவுக்கு என்று தனி ரசிகர்கள் உண்டு. அந்த வகையில் பாலாவின் படங்களால் ஈர்க்கப்பட்ட அவரது அக்காள் மகள் முத்துமலரை கடந்த 2004ம் ஆண்டு பாலா திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் உண்டு. திருமணவாழ்க்கை 14 ஆண்டுகளாக மகிழ்ச்சியாக சென்று வந்த நிலையில் தற்போது இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில மாதங்களாகவே பாலாவுடன் அவரது மனைவி முத்து மலர் இல்லை என்று சொல்லப்படுகிறது. அவ்வப்போது பாலா சென்று சமாதானம் செய்து அழைத்து வந்தாலும் முத்துமலருடன் மீண்டும் பிரச்சனை ஏற்பட்டு அவர் சென்றுவிடுவது வழக்கமாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பிரச்சனை பெரிதாகி நிரந்தரமாக பாலாவை முத்துமலர் பிரிந்து சென்றுவிட்டதாக சொல்லப்படுகிறது.

இதனால் பாலா தற்போது தனியாகவே வசித்து வருவதாக கூறப்படுகிறது. பாலா தொடர்ந்து திரைப்படங்களின் படப்பிடிப்பு என்று கூறி பல நாட்கள் வெளியூரிலேயே இருப்பது தான் கருத்து வேறுபாட்டுக்கு முதல் காரணம் என்று சொல்லப்படுகிறது. இருந்தாலும் மனைவி முத்துமலரை சமாதானம் செய்து அழைத்து வர வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளதாக பாலா தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.