தே.மு.தி.க. வாயைக் குறைக்குமா..? கடும் கோபத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகள்.

ஜெயலலிதாவின் புண்ணியத்தில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற அளவுக்கு மெகா அந்தஸ்துக்கு உயர்ந்தார் விஜயகாந்த். அந்த நன்றிக்கடனை மறந்து, அ.தி.மு.க.வை விமர்சனம் செய்வதைக் கண்டு ரத்தத்தின் ரத்தங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


கடந்த சட்ட்மன்றத் தேர்தலிலேயே அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறினார் விஜயகாந்த். மக்கள் நலக்கூட்டணி என்ற பெயரில், மூன்றாவது அணியாக போட்டியிட்டு கிடைத்த மரணஅடியால் மீண்டும், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்து கொண்டது, தே.மு.தி.க., தான். ஆனால், அதை மறந்து, கூட்டணியில் கூடுதல், 'சீட்' கொடுக்கவில்லை என்றால், 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம்' என, பிரேமலதா பேசுவதும், 'கூட்டணிக்காக, அ.தி.மு.க., தான் கெஞ்சுகிறது' என, சுதீஷ் பேசுவதும், அ.தி.மு.க.,வில் கொதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

அப்பா வழியில் அரசியலில், ஒரு இடத்தை பிடிப்பதற்கு முன்பே பிரபாகரன், கூட்டணி கட்சியான அ.தி.மு.க.,வை விமர்சிப்பது அவரது கட்சியினருக்கே பிடிக்கவில்லை. கடந்த லோக்சபா தேர்தலுக்கு முன்பு வரை அ.தி.மு.க.,வை விமர்சித்து விட்டு பின் அந்த கட்சியுடன்கூட்டணி வைத்து போட்டியிட்ட, தே.மு.தி.க.,வை தொண்டர்கள் வெற்றி பெற செய்யவில்லை.

தற்போதைய நிலையில் அரசியலில் நிலைத்து நிற்க கூட்டணி அவசியம் என்பதை, தே.மு.தி.க., தொண்டர்கள் உணர்ந்துள்ளனர். 15 ஆண்டுகளாக சட்டசபை தேர்தல்கள், லோக்சபா தேர்தல்கள், உள்ளாட்சி தேர்தல்களை சந்தித்து அந்த கட்சியினர் பொருளாதாரத்தை இழந்துள்ளனர். தனித்து போட்டி என்றால் அவர்கள் தலைதெறிக்க ஓடும் நிலை தான் உள்ளது.கடந்த, 2006 தேர்தலில் 11 சதவீத ஓட்டுக்களை பெற்ற தே.மு.தி.க.,விற்கு தற்போது எத்தனை சதவீத ஓட்டுக்கள் இருக்கும் என்பது அக்கட்சி தலைமைக்கு தெரியும்.

அதற்கு ஏற்ப தொகுதிகளை முயற்சிக்க வேண்டும் ஒழிய, பா.ம.க.,வை மனதில் வைத்து அந்த கட்சிக்கு கிடைத்த தொகுதிகளை, தே.மு.தி.க.,வும் எதிர்பார்ப்பது அதன் எதிர்கால நலனுக்கு நல்லது அல்ல. அதை விடுத்து கூடுதல் தொகுதிகளை எதிர்பார்த்து கூட்டணி கட்சியினரை விமர்சிப்பது, கூட்டணியில் இடம் பெற்ற பின்னால் தேர்தலில் அவர்களது ஒத்துழைப்பு கிடைக்காமல் போக செய்யும். இதை தே.மு.தி.க., தலைமை உணருமா என அந்த கட்சி தொண்டர்களே வருந்துகிறார்கள்.

இதையெல்லாம் பிரேமலதாவும் சுதீஷும்தான் உணர வேண்டும்.