மாலை நேரங்களில் வீட்டிலிருப்பவர்களுக்குச் சுடச்சுட மொறுமொறுவென உருளைக்கிழங்கு போண்டா செய்து தந்தால் எல்லோரும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.
உருளைக்கிழங்கு மசாலா பிடிக்காதவர்கள் இருக்க முடியுமா? அதுவும் அதை போண்டாவாகச் செய்தால் கேட்க வேண்டுமா?
தேவையானவை:
கடலை மாவு - 1 கப்,
ஆப்ப சோடா - 1 சிட்டிகை,
உப்பு - ருசிக்கேற்ப,
எண்ணெய் - தேவையான அளவு.
(மசாலாவுக்கு) உருளைக்கிழங்கு - கால் கிலோ,
பெரிய வெங்காயம் - 1,
பச்சை மிளகாய் - 2,
இஞ்சி - 1 துண்டு,
கறிவேப்பிலை, மல்லித்தழை - சிறிதளவு,
எலுமிச்சம்பழச் சாறு - 1 டேபிள் ஸ்பூன்,
உப்பு - ருசிக்கேற்ப,
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,
கடுகு - அரை டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்.
செய்முறை:
உருளைக்கிழங்கை வேகவைத்து, தோலுரித்து மசியுங்கள். வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்குங்கள்.
எண்ணெயைக் காயவைத்து கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், மஞ்சள்தூள், சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்குங்கள். வெங்காயம் வதங்கியதும் மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து, அதனுடன் கறிவேப்பிலை, மல்லித்தழை, எலுமிச்சம் பழச் சாறு, தேவையான உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்குங்கள். ஆறியதும் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வையுங்கள்.
பிறகு, கடலை மாவுடன் சிறிது உப்பு, ஆப்ப சோடா, தன்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து, உருளைக்கிழங்கு மசாலா உருண்டைகளை மாவில் தோய்த்து, காயும் எண்ணெயில் போடுங்கள். எண்ணெய் கொள்ளுமளவு போட்டு, பொன்னிறமாக வெந்ததும் எடுங்கள்.
தக்காளி சாஸ் அல்லது புதினா சட்னியுடன் பரிமாறவும்.