கேரளா மக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஓணம் திருநாள் வாழ்த்து..!

பாரம்பரிய சிறப்புமிக்க பண்டிகையான திருவோணப் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வாழ்த்து வெளியிட்டுள்ளார்.


மேலும் அவர், ’திருமால் வாமன அவதாரம் எடுத்து, மகாபலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் கேட்டு, முதல் அடியில் பூமியையும், இரண்டாம் அடியில் வானத்தையும், மூன்றாம் அடியை மகாபலி சக்கரவர்த்தியின் தலையிலும் வைத்து, அவனது செருக்கினை அடக்கி, அழித்ததோடு, மகாபலி சக்கரவர்ததி வேண்டியபடி, ஆண்டுக்கு ஒருமுறை தன் நாட்டு மக்களை காண திருமால் அருள் புரிந்தார். அதன்படி, மகாபலி சக்கரவர்த்தி மக்களை காணவரும் நாளே திருவோணத் திருநாளாக மலையாள மக்களால் கொண்டாடப்படுகிறது. 

சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தை வலியுறுத்தும் வகையில், மலையாள மக்களால் சாதி, மத பேதமின்றி கொண்டாடப்படும் இத்திருவோணத் திருநாளில், மக்கள் அனைவரும் எல்லா நலன்களும், வளங்களும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்ந்திட வேண்டும் என்று வாழ்த்தி, மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது உளமார்ந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.