வரும் தேர்தலில் அ.தி.மு.க.வின் சீட் கேட்டு கடைசி நாளில் எக்கச்சக்கம் பேர் குவிந்துவிட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 5,700 எண்ணிக்கையில் இருந்த வேட்பு மனு விற்பனை, கடைசி நாளில் 8 ஆயிரத்தைத் தாண்டியிருக்கும் என்று சொல்லப்படுகிறது.
அ.தி.மு.க.வில் அதிரடியாக வேட்பாளர் நேர்காணல்... கடைசி நாளில் எக்கச்சக்க மனுக்கள்

இந்த நிலையில், ஜெ. பாணியில் அனைவரையும் ஒன்றாக வரவழைத்து நேர்காணல் நடத்த எடப்பாடி பழனிசாமி முடிவு எடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது. ஆம், இது ஜெயல்லலிதா ஸ்டைல்தான்.
விருப்பமனு தாக்கல் செய்த அத்தனை பேரையும் ஒன்றாக வரவழைத்து, ஒரே இடத்தில் அமரவைத்து, ‘உங்கள் அனைவருக்கும் நன்றி. யாருக்குக் கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் கட்சிக்காக உழைத்து வேட்பாளரை வெற்றி பெற வையுங்கள்‘ என்று சொல்லி அனுப்பிவிடுவார்.
அதே பாணியில்தான் எடப்பாடி பழனிசாமியும் வேட்பாளர் நேர்காணல் செய்ய இருக்கிறார். ஆம், மார்ச் 4ம் தேதி நேர்காணல் நடைபெறும் என்று ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். அறிவித்துள்ளனர்.
அதன்படி 4ம் தேதி காலை 9 மணி முதல் வேட்பாளர் நேர்காணல் தொடங்குகிறது. அப்போது கன்னியாகுமரி கிழக்கு, கன்னியாகுமரி மேற்கு, தூத்துக்குடி வடக்கு, தூத்துக்குடி தெற்கு, திருநெல்வேலி மாவட்டங்கள். என்று பல்வேறு கட்சி ரீதியிலான மாவட்டங்கள் சார்பில் சந்திப்பு நடைபெருகிறது.
அதே தினத்தில் மாலை 3 மணி முதல் அடுத்த செட் வேட்பாளர்கள் பட்டியல், அதாவது கரூர், அரியலூர், வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் கிழக்கு மத்தியம், கடலூர் மேற்கு என பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு நேர்காணல் நடக்கிறது.
அதேபோன்று, புதுச்சேரி மாநிலம், கேரள மாநிலங்களுக்கு நேர்காணல் நடைபெறும் என்றும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. தனித்தனையாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களை சந்திக்கலாம் என்று ஆசைப்பட்ட கட்சி நிர்வாகிகள் இதனால் சோர்வு அடைந்திருக்கிறார்கள்.
தி.மு.க.வினர் ஒவ்வொரு நபராக சந்தித்து பேசிக்கொண்டு இருக்கும் நேரத்தில், ஒரே நேரத்தில் ஒட்டுமொத்த மாவட்டங்களையும் முடிக்கிறது அ.தி.மு.க. என்பதுதான் ஹாட்.. ஜெயலலிதா பாணியில் எடப்பாடீன் அதிரடி தொடர்கிறது.