செயற்கை முறையில் ஒற்றைக் குழந்தை உருவாக்க முடியுமா ??

இப்போது பொதுவாக செயற்கை முறையில் குழந்தை பெற்றுக்கொள்பவர்களே இரட்டைக் குழந்தைகள் அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் பெற்றுக்கொள்கிறார்கள் என்பதைப் பார்த்தோம். இதனை எப்படி தடுக்கமுடியும் என்பதை பார்க்கலாம்.


              ஒரே ஒரு சினைக்கருவை மட்டுமே தாயின் கர்ப்பப்பைக்குள் செலுத்தவேண்டும் என்பதை இப்போது உலகம் முழுவதும் மருத்துவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். இதனால் தேவையற்ற ஒன்றுக்கு மேற்பட்ட கருத்தரிப்பு நிகழாது.

              முன்பு கூடுதலாக உருவாக்கப்பட்ட சினைக்கருக்களை உறையவைத்து பயன்படுத்தும் கிரையோபிரசர்வேஷன் முறை பயன்பாட்டில் இல்லை. அதனால் உருவாக்கப்பட்ட அனைத்து சினைக்கருக்களும் கர்ப்பப்பைக்குள் வைக்கப்பட்டன.

              இப்போது கூடுதல் சினைக்கருக்களை மிகவும் பத்திரமாக பாதுகாத்து, தேவைப்பட்டால் மீண்டும் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பதால் ஒற்றை சினைக்கருவை கர்ப்பப்பைக்குள் வைப்பதே போதுமானது.

              ஒற்றை சினைக்கருவை செலுத்துவதால் சக்சஸ் ரேட் குறைவு என்பதால் பலரும் தயங்குவதுண்டு. இப்போது பிளாஸ்டோசிஸ்ட் எனப்படும் வகையில் சினைக்கருவை ஐந்தாவது நாளில் கர்ப்பப்பைக்குள் வைப்பதால் வெற்றிவாய்ப்பு விகிதம் நிச்சயம் அதிகமாக இருக்கிறது.

முன்பு சினைக்கருவை வளர்ப்பதும், பாதுகாப்பதும் மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது. இன்றைய விஞ்ஞான வளர்ச்சியினால் பிளாஸ்டோசிஸ்ட் டிரான்ஸ்பர் மிகவும் எளிமையாக செய்யப்படுவதால், ஒற்றை சினைக்கரு மூலமே நிச்சயம் வெற்றிபெற முடியும். இதனால் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளினால் ஏற்படும் சிக்கலும் தீரும்.