பீகார் மாநிலத்தில் எம்எல்ஏ தம்பி மகளை காதலித்து வந்த இளைஞர் ஒருவர் அவரை துப்பாக்கியால் சுட்டு கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
துப்பாக்கி குண்டுகளுடன் சடலமாக கிடந்த எம்எல்ஏ உறவுப் பெண்! அருகே ஆண் பிணம்! பதைபதைக்க வைத்த சம்பவம்!

பீகார் மாநில ராஷ்டிரிய ஜனதா தள எம்எல்ஏ விஜய்குமாரின் தம்பி மகளான ரியா என்பவரும் ஆசிப் என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ராஜஸ்தானில் ரியா படித்துக் கொண்டிருக்கும் போது அங்குள்ள இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் பிரிந்து விட்டனர்.
இந்நிலையில் கடந்த 9ம் தேதி உத்தர பிரதேசத்தில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ரியா வீடு திரும்பவில்லை. இதுகுறித்து தாயார் போலீசில் புகார் கொடுத்தார். இதற்கிடையே ரியாவும், அவரது காதலனுமான ஆசிப்பும் துப்பாக்கியால் சுடப்பட்டு சடலமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
பின்னர் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் இருவரின் உடலையும் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தை விசாரித்த போலீசார் முதலில் ரியாவை துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டு பின்னர் ஆசிப் தன்னையும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தனர்.
இதுபோன்ற விபரீத முடிவுக்கு காதல் தோல்விதான் காரணமாக இருக்கும் என்றும் போலீசார் தெரிவித்தனர். மேலும் ஆசிப்புக்கு துப்பாக்கி கொடுத்து உதவிய அவரது நண்பர் டேனிஷ் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். எம்எல்ஏ தம்பி மகளும், அவரது காதலனும் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.