நிறைய பேருக்கு சருமம் எப்போதும் உலர்ந்து காணப்படும். மேலும் கை, கால்கள் சொர சொரப்பாகவும், பாதங்கள், உதடுகள் ஆகியன வெடிப்புடனும் காணப்படும்.
உங்கள் சருமம் என்ன வகை… அதை எப்படி பாதுகாப்பது தெரியுமா?
குளிர்ப் பிரதேசங்களில் வசிப்பவர்களுக்கும், குளிர் காலங்களில் இவ்வகைச் சருமம் இருக்கும். தோல் அடிக்கடி உரிந்துவிடும். இவ்வகைச் சருமம் கொண்டவர்கள் ‘மாய்ஸ்ச்ரைசர்’ என்னும் திரவத்தைத் தினசரி உபயோகித்து வரவேண்டும்.
எண்ணெய்ப் பசையுள்ள சருமம் கொண்டவரின் மேல்வாய், நெற்றி ஆகிய பகுதிகள் எப்போதும் எண்ணெய் வழிவது போன்று தோற்றம் தரும். இவர்கள் பவுடர் போட்டுக் கொண்டால், திட்டுத் திட்டாகத் தெரியும். இவர்களது சருமத் துவாரங்கள் திறந்திருப்பதால் எளிதில் முகத்தில் வெண் கருப்புப் புள்ளிகள் தோன்றக்கூடும்.
இவ்வகைச் சருமம் கொண்டவர்கள் முகத்திற்கு எவ்வித கிரீமும் உபயோகிக்காமல் இருப்பது நல்லது. முகத்தை சுத்தம் செய்ய ‘ஆஸ்ட்ரிஜென்ட்’ என்னும் திரவத்தை உபயோகிக்க வேண்டும். இவர்கள் கொழுப்புப் பதார்த்தங்களைத் தவிர்க்க வேண்டும். இரவு படுக்கைக்குப் போகுமுன் சோப்பு போட்டு முகத்தைக் கழுவ வேண்டியது அவசியம்.
சாதாரண சருமம் கொண்டோரின் இருபுறமும் எண்ணெய் வழிவது போலவும், கன்னப் பகுதிகளின் சருமம் உலர்ந்தது போலவும் இருக்கும். இம்மாதிரி சருமம் சிலருக்கு அலர்ஜி ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும் என்பதால் க்ரீம், பவுடர், சோப் போன்றவற்றை ஒரு முறை பயன்படுத்திப் பார்த்தே உபயோகிக்க வேண்டும்.
சருமம் சாதாரணமாக எல்லோருக்குமே முப்பது வயதுவரை இறுக்கமாகவும், ஈரத்தன்மையோடும் இருக்கும். 30 வயதிற்குப்பின் கொஞ்சம் கொஞ்சமாக உயிரணுக்களை இழந்துவிடும். இம்மாதிரிச் சமயத்தில்தான் நமது சருமத்தைப் பாதுகாக்க வேண்டியது அவசியம். உடற்பயிற்சியும், உடல், முகம் இவற்றிற்கு ‘மசாஜ்’ செய்யவும் வேண்டும். இவ்வாறு செய்வதால் உடலில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். உடல் இளமையாகத் தோற்றமளிக்கும்.
நம் சருமத்திற்கு ஏற்ற சோப், பவுடர் முதலியவற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். கடலைமாவும், பாசிப்பயறு மாவும் சருமத்திற்கு மிகவும் ஏற்றவை.