ஜனவரி 10ம் தேதி திருவாதிரை விரதம். எத்தனை சிறப்பு இந்த விரதம் என்று அறிந்துகொள்ளுங்கள்!

திருவாதிரை நட்சத்திரம் சிவபெருமானுக்கு உகந்த நட்சத்திரமாகும்.


கீதையை உபதேசம் செய்த கிருஷ்ண பரமாத்மா, 'நட்சத்திரங்களில் நான் திருவாதிரை" என்று கூறியிருப்பதில் இருந்தே, அந்த நட்சத்திரத்திற்கான சிறப்பை அறியலாம். மார்கழி மாதம் என்பதே சிறப்பான மாதம் தான். மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை மேலும் சிறப்பு சேர்ப்பதாகும்.

ஜனவரி 10-ம் தேதி மார்கழித் திருவாதிரை - ஆருத்ரா தரிசனம். சிவபெருமானின் திருக்கோலங்களில் சிறப்புமிக்கது சிவபெருமானின் ரூபத்தை பெரும்பாலான சிவாலயங்களில் சிவ லிங்கமாக தான் காட்சி தருவது வழக்கம். ஆனால் சில சிவாலயங்களில் இருக்கும் சிவனின் நடராஜர் ரூபம் மிக சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். அப்படி நடராஜர் ஸ்வாமிக்கு ஒரு ஆண்டில் ஆறு முறை மட்டுமே சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்படும். அந்த சிறப்பு வாய்ந்த நாளில் மிக முக்கிய நாளாக ஆருத்ரா அபிஷேப் பெருவிழா ஆண்டு தோறும் மார்கழி மாதம் கொண்டாடப்படுகின்றது.

திருவாதிரை விரதம் என்பது திருவாதிரை நட்சத்திரத்தோடு கூடிய நிறைமதி நாளில் உபவாசம் இருந்து நோற்கும் ஒரு நோன்பாகும். அத்துடன், திருவெம்பாவை வழிபாட்டுக்குரிய பத்து தினங்களின் இறுதி நாளாகவும் மார்கழித் திருவாதிரை அமைகின்றது. மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரத்தன்று (திருவாதிரை தரிசனம்) காட்சி தரும் கடவுளை கண்டு களித்தால் வீழ்ச்சியில்லாத வாழ்க்கை அமையும்.

திருவாதிரை தரிசனத்தை, ஆருத்ரா தரிசனம் என்றும் கூறுவார்கள். அன்றைய தினம் சகல சிவாலயங்களிலும் நடராஜருக்கு அபிஷேகம் செய்வதும், ரிஷப வாகனத்தில் ஈஸ்வரனும், ஈஸ்வரியும் திருவீதி உலா வருவதும் விழாவாக நடைபெறும்.

மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திர நாளில் தில்லை சிதம்பரத்தில் கோவில் கொண்டருளிய நடராஜப் பெருமானை தரிசிக்க தேவர்கள் ஒன்றுகூடுவதாக வரலாற்று நு}ல்கள் கூறுகின்றது. வியாக்ரபாத முனிவர், பதஞ்சலி முனிவரும் சிவ பெருமானின் திருநடனத்தை காண விரும்பி ஈசனை துதித்தனர். அவர்களுக்காக திருநடனத்தை நிகழ்த்திக் காட்டிய நிகழ்வு தான் ஆருத்ரா தரிசனமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

திருவாதிரை விரதம் இருப்பவர்கள் உபவாசம் இருந்து கோவிலுக்கு சென்று இறைவனை வழிபட வேண்டும். அன்று வீட்டில் முறைப்படி இறைவனை வழிபட்டு நைவேத்தியமாக களி படைக்க வேண்டும். மார்கழி திருவாதிரை நாளில், சுவாமிக்கு களி படைத்து குழந்தைகளுக்கு வழங்கலாம். அன்று முழுவதும் சிவபுராணம், தேவாரம், திருவாசகத்தை பக்தியுடன் படிக்க வேண்டும். இரவில் எளிய உணவு சாப்பிட்டு விரதத்தை முடிக்கலாம்.

சிவபெருமான் அருவம், உருவம், அருவுருவம் என்னும் மூன்று வடிவம் கொண்டவர். இம்மூன்று வடிவங்களிலும் சிவபெருமான் அருள்புரியும் தலம் சிதம்பரம்தான். 2020 ஜனவரி 9ஆம் தேதி மாலை 3.42 மணிக்கு திருவாதிரை நட்சத்திரம் தொடங்கி 10ஆம் தேதி பிற்பகல் 3.31 வரை நீடிக்கின்றது. இதன் காரணமாக ஜனவரி 10ஆம் தேதி அதிகாலை 3.30 மணிக்கு நடராஜருக்கு ஆருத்ரா அபிஷேகம் நடப்பெறும்.

பின்னர் நண்பகல் 12 மணிக்கு ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு உத்திரகோச மங்கை திருக்கோயிலில் இருக்கும் நடராஜருக்கு ஜனவரி 9ஆம் தேதி காலை 6 மணிக்கு மேல் சாத்தப்பட்டிருக்கும் சந்தன காப்பு களையப்பட்டு அபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து அன்று இரவு 11 மணிக்கு மேல் மகா அபிஷேகமும், ஜனவரி 10ம் தேதி காலை ஆருத்ரா தரிசனமும் நடைபெற உள்ளது.

ஈசனின் ஆருத்ரா தரிசனம் கண்டால், எல்லா பாவங்களும் நீங்கி, நீங்கா புண்ணியம் பெற்றிடலாம். உத்திரகோசமங்கை திருத்தலத்தில் இருக்கும் மரகத நடராஜரை தரிசிக்க இம்மையிலும் நன்மை தருவார். பிறவிப்பிணி தீரும் என்பது நம்பிக்கை. மார்கழி மாத திருவாதிரை தினத்தன்று, விரதம் இருந்து சிவபெருமானை பூஜித்து வழிபட்டால், நல்ல கணவன் கிடைப்பார். தாலிப் பலன் பெருகும். பாவங்கள் நீங்கும், அறிவும் ஆற்றலும் கூடும் என்பன போன்ற எண்ணற்றப் பலன்களைக் கொடுக்கும் விரதமாக இது உள்ளது.