காதலித்தவரையே மணக்க வேண்டுமா? ஆடிப்பூரத்தன்று இந்த தெய்வத்தை வணங்குங்க!

ஆடி மாதத்தில் வரும் பூர நட்சத்திரம் 'ஆடிப்பூரம்' என்று சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு வருகிற சனிக்கிழமையன்று (3.8.2019) ஆடிப்பூரம் கொண்டாடப்படுகிறது.


ஆடிப்பூரத்தில் தான் பொறுமையின் வடிவமான பூமா தேவியின் அவதாரமாக ஆண்டாள் அவதரித்தார். ஸ்ரீவில்லிபுத்தூரில் வாழ்ந்து வந்த பெரியாழ்வாருக்கு குழந்தைப் பேறு இல்லை. இக்குறையை நீக்குமாறு அவர் தினமும் திருமாலை வேண்டினார். அக்குறையை நீக்கும் பொருட்டு கோவில் நந்தவனத்தில் நள வருட ஆடிப்பூர செவ்வாய் கிழமையில் துளசி செடிக்கு அடியில் பெண்குழந்தை ஒன்றைக் கண்டு எடுக்கும்படி திருமால் அருளினார். அக்குழந்தைக்கு கோதை என்று பெயரிட்டு வளர்த்து வந்தார் பெரியாழ்வார்.

கோதை அரங்கனையே மணாளனாகக் கருதி வளர்ந்து வந்தாள். பெரியாழ்வார் வடபத்ரசாயி பெருமாளுக்கு கட்டும் மாலையை தினமும் அவர் அறியாத வண்ணம் அணிந்து மீண்டும் எடுத்த இடத்தில் வைத்து வந்தாள் கோதை.

ஒருநாள் இச்செயலைக் கண்ட பெரியாழ்வார் அதிர்ச்சியுற்று கோதையைக் கடிந்து கொண்டு வேறு மாலையைத் தயார்செய்து பெருமாளுக்கு சூட்டினார். அன்று இரவு கனவில் தோன்றி பெருமாள் உம்பெண் உணர்வால் மட்டுமல்ல மனதாலும் என்னை ஆண்டாள். எனவே எனக்கு அவள் சூட்டிய மாலையையே அணிவிப்பீர் என்று கூறினார். இதனால் கோதை அன்று முதல் சூடிக்கொடுத்த சுடர்கொடி, ஆண்டாள் என்று வழங்கப்பட்டாள்.

ஆண்டாள் இயற்றிய திருப்பாவை, நாச்சியார் திருமொழி பாடல்கள் இன்றளவும் மக்களால் பாடப்படுகின்றன. ஆண்டாளை வணங்கினால் மன உறுதியுடன் நினைத்தது நிறைவேறும். தம்பதி ஒற்றுமை ஏற்படும் என்று கருதப்படுகிறது. ஒவ்வொரு வருடம் ஆடிப்பூரத்தன்று ஸ்ரீவில்லிபுத்தூர் தேர்த் திருவிழா விமர்சையாக நடைபெறுகிறது.

உலக மாதாவாகிய பார்வதி தேவி ருதுவான தினமாகவும் இந்நாள் கருதப்படுகிறது. அன்னையை விரதமிருந்து தரிசித்தால் அஷ்டமா சித்திகளும் கைகூடும் உன்னத நாளிது.

ஆடிப்பூரத்தில் தான் திருநெல்வேலி காந்திமதி அம்மனுக்கு வளைகாப்பு வைபவம் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் அம்மனுக்கு பக்தர்களால் வழங்கப்பட்ட கண்ணாடி வளையல்களை கொண்டு அலங்காரம் செய்யப்படுகிறது.

3 நாட்கள் கழித்து பக்தர்களுக்கு கண்ணாடி வளையல்கள் விநியோகம் செய்யப்படுகிறது. இவ்வளையல்களை அணிவதால் குழந்தைப்பேறு கிட்டும்: மாங்கல்ய பலம் கூடும் என்று கருதப்படுகிறது.