கொரோனாவை தடுக்க ரூ.1.25 கோடி! அள்ளிக் கொடுத்த அஜித்..!

பிரபல திரைப்பட நடிகர் அஜித் கொரோனா தடுப்பு பணிகளுக்காக 1.25 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.


உலகமெங்கும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவிலும் கடந்த சில நாட்களாகவே அதி வேகமாக பரவி வருகிறது. இதுவரை இந்தியாவில் 4500 க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல தமிழ்நாட்டில் சுமார் 600 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. 

இந்நிலையில் கொரோனா மருத்துவ உதவி மற்றும் நிவாரணப் பணிகளுக்கு கடந்த சில நாட்களாகவே பல்வேறு தரப்பினரும் நிதியுதவி அளித்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக கிரிக்கெட் வீரர்கள் மற்றும் திரையுலகைச் சார்ந்தவர்கள், தொழிலதிபர்கள் ஆகியோர் கொரோனா தடுப்பு பணிகளுக்கு நிதியுதவி வழங்கி வருகின்றனர். அந்த வகையில் பிரபல திரைப்பட நடிகர் அஜித் அவர்கள் கொரோனா தடுப்பு பணிகளுக்காக 1.25 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி நடிகர் அஜித் 50 லட்சம் ரூபாயை பிரதமர் பொது நிவாரண நிதிக்காகவும், 50 லட்சம் ரூபாயை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காகவும், சினிமா படப்பிடிப்பு ரத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஃபெப்சி ஊழியர்களுக்கு 25 லட்சம் ரூபாயும் நிவாரணமாக வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.