மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை சார்பில் ஏசிடி பைபர்நெட் லிமிடெட் நிறுவனத்தால் சென்னை, கீழ்ப்பாக்கம், அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள ஒருங்கிணைந்த நவீன தீவிர சிகிச்சை மையத்தை இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சிமூலமாக திறந்து வைத்தார்கள்.
கொரோனா நோயாளிகளுக்கு நற்செய்தி. முதல்வர் எடப்பாடியார் திறந்து வைத்திருக்கும் நடமாடும் நவீன தீவிர சிகிச்சை மையம்..!

ஏசிடி பைபர்நெட் லிமிடெட் நிறுவனம், கூட்டாண்மை சமூக பொறுப்பு செயல்பாட்டின் கீழ், சென்னை, கீழ்ப்பாக்கம், அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 10 படுக்கைகள் கொண்ட ஒருங்கிணைந்த நவீன தீவிர சிகிச்சை மையத்தை, கோவிட்-19 வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க நன்கொடையாக நிறுவியுள்ளது. இந்த மையத்தில் 10 படுக்கைகளும், ஒரு செவிலியர் பணிப் பகுதியும் உள்ளது.
இந்த மையத்தில் அவசரசிகிச்சை அளிக்கத் தேவையான பிராணவாயு இணைப்புகள் மற்றும் உயிர்காக்கும் சிகிச்சைக்கான மருத்துவக் கருவிகள் உள்ளன. மருத்துவமனைக்குள் கோவிட்-19 சிகிச்சைக்காக எங்கெல்லாம் அவசர பிரிவின் அவசியம் ஏற்படுகிறதோ அங்கெல்லாம் இந்த மையத்தை எடுத்துச் செல்லலாம். நோயாளிகளை ஒரே இடத்தில் இருந்து கவனிக்க மைய கண்காணிப்பு வசதியும், புகைப்படக் கருவிகளும் உள்ளன. இத்தகைய வசதிகள் கொண்ட இந்த மையம் இந்தியாவிலேயே முதல் மையம் ஆகும்.