மதமாற்ற முயற்சி! தட்டிக் கேட்டவர் கொடூர கொலை! கும்பகோணத்தில் பதற்றம்!

மதம் மாற்ற முயன்றவர்களை தட்டிக்கேட்ட நபர் கொடூரமாக கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து கும்பகோணம் பகுதியில் பதற்றம் நிலவுகிறது.


கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் சமையல் கலைஞர். திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு உணவு தயாரித்து கொடுக்கும் வேலை செய்து வருகிறார். இதற்காக திருபுவனம் அருகாமையில் உள்ள பகுதிகளில் உள்ளவர்களை வேலைக்கு எடுப்பது வழக்கம்.

 

நேற்று காலை உணவு சமைப்பதற்கு தேவையான வேலை ஆட்களை எடுப்பதற்காக அருகே உள்ள கிராமத்திற்கு ராமலிங்கம் சென்றுள்ளார். அங்குள்ள தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள் வசிக்கும் பகுதியில் தனது பணியாளர்களை ராமலிங்கம் தயார்படுத்திக் கொண்டிருந்தார்.

 

அப்போது அங்கு வந்த இரண்டு பேர், மதமாற்றம் குறித்து பேசியுள்ளனர். ராமலிங்கத்தின் தொழிலாளர்களிடம் மதம் மாறினால் ஏற்படும் நன்மைகள் குறித்து பேசியதாக சொல்லப்படுகிறது. ஒரு கட்டத்தில் அவர்கள் ராமலிங்கத்தையும் மதம் மாறுமாறு கூறியதாக கூறப்படுகிறது.

 

அப்போது உணர்ச்சிவசப்பட்ட ராமலிங்கம் மதம் மாறும் மாறு கூறியவர்கள் அணிந்திருந்த குல்லாவை எடுத்து தனது தலையில் வைத்துக் கொண்டார். மேலும் தன் வசம் வைத்திருந்த விபூதியை அவர்கள் இருவருக்கும் பூசிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

 

உடனடியாக அந்த இருவரும் விபூதியை அழித்துள்ளனர். அப்போது நான் உங்கள் குல்லாவை வைத்திருக்கும் போது நீங்கள் மட்டும் ஏன் எங்கள் விபூதியை வைக்க மறுக்கிறீர்கள் என கேட்டுள்ளார். இதனால் இரு தரப்பு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

 

பிறகு அங்கிருந்தவர்கள் ராமலிங்கம் மற்றும் இருவரையும் அங்கிருந்து விலக்கி அனுப்பி வைத்துள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்த ராமலிங்கத்தை மர்ம நபர்கள் வழிமறித்து வெட்டியுள்ளனர். இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்த ராமலிங்கம் உடனடியாக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

 

ஆனால் அவரை தஞ்சை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தினர். தஞ்சை செல்லும் வழியிலேயே ராமலிங்கம் உயிரிழந்தார். மதமாற்றத்தை தட்டிக்கேட்ட ராமலிங்கம் கொலை செய்யப்பட்டதாக வெளியான தகவலால் கும்பகோணத்தில் பதற்றம் ஏற்பட்டது.

 

இதனை அடுத்து தஞ்சை, நாகை, அரியலூர் மாவட்ட எஸ்.பிக்கள் மற்றும் ஐ.ஜி தலைமையில் போலீசார் கும்பகோணம், திருபுவனம் பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளனர். அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.