ஆப்பிள் ஐ போன் வாங்க கிட்னியை விற்ற இளைஞன்! அடுத்து நேர்ந்த பரிதாபம்!

சீனாவில் ஐ ஃபோன், ஐ பேட் உள்ளிட்டவற்றை வாங்குதற்காக தனது ஒரு கிட்னியை விற்ற இளைஞனின் மற்றொரு கிட்னியும் செயலிழந்தது.


வாழ்வதற்கு ஒரு கிட்னியே போதுமானது என்ற அறிவுதான் இவரது வாழ்க்கைக்கு பாதிப்பாகியுள்ளது. சீனாவைச் சேர்ந்த 17 வயது வாங் ஷாங்கன்.  ஆசையே துன்பத்துக்கு காரணம் என்பது இவரது வாழ்க்கையில் உண்மையாகியிருக்கிறது. இவரது ஆசை ஆப்பிள் ஐ போன், ஐபேட் உள்ளிட்டவற்றை வாங்க வேண்டும் என்பது. ஆனால் கையில் காசு இல்லாத அவர் என்ன செய்வார்?

 

கடைசியில் ஒரு யோசனை தோன்றியது. ஒரு கிட்னியை விற்றால் என்ன? விளைவு கள்ளச் சந்தையில் கிட்னி திருடும் ஒரு கும்பலை நாடினார். அவரது ஒரு கிட்னிக்கு அந்தக் கும்பல் 4,500 ஆஸ்திரேலிய டாலர்களைக் கொடுத்தது. அதனைக் கொண்டு அவர் ஒரு ஆப்பிள் ஐஃபோன் 4-ஐயும் ஐ பேடையும் வாங்கினார். 

 

ஆனால் பரிதாபம் என்னவென்றால் அந்த கும்பல் அவரது கிட்னியை எடுக்க மேற்கொண்ட அறுவை சிகிச்சையே அவருக்கு எதிராக அமைந்தது. உரிய மருத்துவ பாதுகாப்பற்ற நிலையிலும், சுகாதார முன்னேற்பாடுகள் இன்றியும் மேற்கொண்ட அறுவை சிகிச்சையால் ஏற்பட்ட நோய்த் தொற்று மற்றொரு கிட்னியையும் பாதித்தது.

 

கண்ணை விற்று சித்திரம் வாங்கியது போல உடல் ஆரோக்கியத்தை இழந்து ஆப்பிள் படைப்புகளை வாங்கிய வாங் ஷாங்கன் தற்போது அவற்றை பயன்படுத்த முடியாமல் படுத்த படுக்கையாகியிருக்கிறார். இந்த வழக்கில் 5 மருத்துவர்கள் உள்ளிட்ட 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆப்பிள் ஐ போன் வாங்க கிட்னியை வைத்த வாங் தற்போது உயிருக்கே போராடிக் கொண்டிருக்கிறார்.