ஒரு நகரத்தையே சின்னாபின்னமாக்கிப் போட்ட சூறாவளி புயல்! 75 லட்சம் பேர் பரிதவிப்பு! மிரள வைக்கும் இயற்கை பேரழிவு!

ஜப்பானில் புயல் தாக்கி சுமார் 75 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் வாழ்க்கை கடும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளது.


ஜப்பானில் ஹகிபிஸ் புயல் தாக்கி அதன் தலைநகரான டோக்கியோவின் தென்மேற்கு பகுதிகள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளன. மணிக்கு 216 கிலோமீட்டர் வேகத்தில் புயல் காற்று வீசியதால் வீடுகளின் கூரைகள் காற்றில் பறந்தன. மின் கம்பங்களும் கடும் சேதத்திற்கு உள்ளாயின. இதனால் மின்சாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டிருக்கிறது 

புயல் அபாயம் ஏற்படும் என ஏற்கனவே சுமார் 75 லட்சம் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து வேறு பகுதிகளுக்கு செல்ல அந்நாட்டு அரசு அறிவுறுத்தியது. அதற்கு ஏற்றார்போல், சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்களது வீடுகளை காலி செய்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். 

புயல் தாக்கி ஓய்ந்த பிறகு கன மழை பெய்ததால் தற்போது சாலை எங்கிலும் வெள்ளப் பெருக்கெடுத்து, நகரமெங்கும் கடும் பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கின்றன. இதன் இடிபாடுகளில் சிக்கி ஏராளமானோர் படுகாயமடைந்து இருக்கக்கூடும் என அந்நாட்டு அரசு கருதுகிறது. தற்போதுவரை 50க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். ஒருவர் இடிபாடுகளில் சிக்கி பலியாகியுள்ளார்.

இன்று காலை டோக்கியோ பகுதிகளில் தாக்கிய புயல் சிறிது நேரத்திற்கு பிறகு இஷு பகுதியை நோக்கி நகர்ந்ததாக வானிலை ஆய்வு மையங்கள் தெரிவிக்கின்றன.