7 மாத கர்ப்பிணியான காவல்துறை அதிகாரி ஊரடங்கும் பணியில் ஈடுபட்டுள்ள சம்பவமானது சமூக வலைத்தளங்களில் பாராட்டப்பட்டு வருகிறது.
நிறை மாத கர்ப்பிணி..! ஆனாலும் கொரோனா டூட்டி பார்க்கும் பெண் போலீஸ் அதிகாரி..! நெகிழ வைத்த காரணம்!
கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. கிட்டத்தட்ட 1,65,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலினால் இதுவரை உயிரிழந்துள்ளனர். சீனா நாட்டில் தொடங்கி, இத்தாலி, அமெரிக்கா, பிரிட்டன், ஸ்பெயின், வடகொரியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய கைகளை சுத்தம் செய்யாமல் பொருட்களை தொடுவதிலிருந்து வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது. 24,00,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்தியா முழுவதிலும் 16,316 பேருக்கு இந்த கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை 2,302 பேர் குணமடைந்து இருப்பதாகவும், 519 பேர் உயிரிழந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
விசாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் பிறந்து 22 நாட்களேயான பெண் கைக்குழந்தையுடன் தடுப்பு பணியில் ஈடுபட்டுவரும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தன. இந்த அதிகாரியின் பெயர் ஸ்ரீஜனா. இவருடைய கணவர் ஒரு வழக்கறிஞர் ஆவார். இவருக்கு மார்ச் மாதம் இறுதியில் குழந்தை பிறந்துள்ளது.
இவரைப் போன்று சத்தீஸ்கர் மாநிலத்தில் ராய்ப்பூர் நகரை சேர்ந்த அமிர்தா சோரி அங்கு துணைநிலை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். இவர் தற்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். தன்னுடைய மகப்பேறு விடுமுறையை தற்போது இவர் ரத்து செய்துள்ளார்.
இந்நேரத்தில், இவர் அப்பகுதியில் ஊரடங்கு கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், "இந்த பணி மிகவும் முக்கியமானது. இந்த பணியில் நான் ஈடுபடும்போது, சக காவலர்கள் உற்சாகம் அடைகின்றனர். இளமையான காவல்துறை அதிகாரிகளும், அனுபவம் வாய்ந்த அதிகாரிகளும் எனக்கு மிகவும் உதவிகரமாக உள்ளனர்" என்று கூறியுள்ளார்.
இவருடைய கடமை உணர்ச்சியை சக காவல்துறை அதிகாரிகள் பெரிதளவில் பாராட்டியுள்ளனர். மேலும் இவர் பணியாற்றும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.