ஆற்றுப்பாலத்தை கடக்கும்போது ஏற்பட்ட நெஞ்சுவலியை பொருட்படுத்தாமல் பேருந்தை பத்திரமாக ஓரங்கட்டிவிட்டு ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
60 பேர் உயிரை காப்பாத்திட்டு எங்களை விட்டுட்டு போய்ட்டீங்களே அப்பா..! கதறிய பஸ் ஓட்டுனரின் மகள்கள்..! நெஞ்சை உலுக்கும் நெகிழ்ச்சி சம்பவம்!
திருச்சி பூவாளுரை சேர்ந்தவர் அரசுப் பேருந்து ஓட்டுநர் திருக்குமரன். திண்ணியம் பகுதியில் இருந்து திருச்சிக்கு பேருந்தை ஓட்டிக் கொண்டு சென்றார். மற்ற பேருந்துகளை போலவே திருக்குமரன் பேருந்திலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. இந்த பேருந்து சிறுமையம்குடி அருகே ஆற்றுப் பாலத்தை கடந்தபோது திருக்குமரனுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.
சிறுமையம்குடி ஆற்றுப்பாலம் அபாயகரமான பாலம். பாலத்தை கடக்கும்போது நெஞ்சு வலி ஏற்பட்டதால் அதை பொருட்படுத்தாத திருக்குமரன் பயணிகளுக்கு எதுவும் ஆகக் கூடாது என ஒரு கையில் ஸ்டியரிங்கை பிடித்தும், மற்றொரு கையில் உயிரை பிடித்தும் பேருந்தை பத்திரமாக ஓட்டி ஆற்றைக் கடந்து நிறுத்தினார்.
பின்னர் தனக்கு நெஞ்சுவலி எனக் கூறிவிட்டு தண்ணீரை குடித்து விட்டு மயங்கிவிட்டார். உடனடியாக அவர் சிறுகுடி அரசு மருத்துவமனையிலும், பின்னர் மேல் சிகிச்சைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்போது வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார் திருக்குமரன். இதை கேள்விபட்டு மருத்துவமனைக்கு வந்த அவரது மனைவி, மக்கள், உறவினர் உடலை பார்த்து கதறி அழுதனர். எல்லாரையும் காப்பாற்றிவிட்டு எங்களை தவிக்க விட்டீங்களே என மகள்கள் கூறி அழுதது நம்மையும் கண்கலங்க வைத்தது.