புதிய கல்விக் கொள்கையில் மத்திய அரசு இறுதி ஆணை பிறப்பிக்கும் முன்பே அ.தி.மு.க. அரசு 5 மற்றும் 8 ஆம் வகுப்புத் தேர்வுக்கு அறிவித்து இருப்பதற்கு திராவிடர் கழகம் தலைவர் வீரமணி கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார். இதோ அவரது அறிக்கை.
5ம் வகுப்புக்குத் தேர்வு வைத்தால் அ.தி.மு.க.வுக்கு ஆபத்து வரும்..! எச்சரிக்கை செய்யும் வீரமணி.

மத்திய அரசின் கல்விக் கொள்கையை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்து நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கு முன்பாகவே அவசர அவசரமாக முந்திக் கொண்டு அய்ந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு நடத்துவதற்கான வழிமுறைகளை தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது ஏன்? பிஞ்சுகளுக்கு இப்படி ஒரு நஞ்சை ஊட்டலாமா?
ராஜாவை விஞ்சிய விசுவாசியாகக் காட்டிக் கொள்வதில் தமிழ்நாடு அரசு - குறிப்பாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் இதில் இவ்வளவுப் பெரிய முரட்டு ஆர்வத்தைக் காட்டுவது ஏன்? பாரதீய ஜனதா - அதன் ஆர்.எஸ்.எஸ். கொள்கையைக் காற்று வேகத்தில் திணிப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அண்ணா பெயரில் கட்சியை வைத்துக்கொண்டு இருப்பவர்கள் ஆச்சாரியாரின் குலக் கல்வித் திட்டத்தின் மறுபதிப்பான ஆர்.எஸ்.எஸ்.சின் கல்வியைத் திணிக்கும் இந்தப் பழிகார செயலில் ஈடுபடுவது வெட்கக்கேடு!
ஆனானப்பட்ட ஆச்சாரியாரே இந்தக் கல்விக் கொள்கையில்தான் ஒழிந்தார் - அ.தி.மு.க. அரசும் அந்தப் பாதையிலே வேகமாக ஓடி குடை சாயப் போகிறதா? அய்ந்தாம், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத் தேர்வு நடத்துவதிலிருந்து மூன்றாண்டுகளுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது என்று சொன்னவர்தான் மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர். இப்பொழுது அவர் துறையிலிருந்தே இந்த வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு நடத்துவதற்கான சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என்றால், என்ன காரணம், இந்த அவசரத்தின் பின்னணி என்ன?
இந்தக் கல்வித் திட்டம் என்ன சொல்லுகிறது? முதல் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்புவரை மறுவடிவமைப்புச் செய்யப்படுகிறது. மொழிக்கும், கணிதத்திற்கும், இந்தியப் பாரம்பரியத்திற்கும் உள்பட முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
மழலைக் கல்வியிலிருந்தே மும்மொழி கற்பிக்கப்படும். ஆறாம் வகுப்பிலிருந்தே இந்தி, சமஸ்கிருதம் கட்டாயம் படித்தாகவேண்டும். (மும்மொழி திட்டத்திற்கு உள்பட்டு மொழிகளைத் தேர்வு செய்யலாம் என்பது வெறும் கண்துடைப்பே!)
இந்தக் கல்வி திட்டத்தை தமிழ்நாடு அரசு வேகப்படுத்துவதன்மூலம் முதலமைச்சர் அண்ணா காலத்தில் நிறைவேற்றப்பட்ட தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கைதான் (தமிழ் மற்றும் ஆங்கிலம்) என்பது தூக்கி எறியப்பட்டு விட்டது என்றுதானே பொருள்?
அண்ணா கொள்கைக்கு நாமம் போடுவதுதான் ‘அண்ணா நாமம் வாழ்க!’ என்பதா? மகாவெட்கக்கேடு.
தேசிய அளவில் ஆறு முதல் 18 வயது வரையில் ஒட்டுமொத்த பள்ளி சேர்ப்பு விகிதம் தொடக்க வகுப்பில் 95 விழுக்காடாக இருப்பது 2017 கணக்கீட்டின்படி ஒன்பது, பத்து வகுப்புகளில் 79.3 விழுக்காடாக வீழ்ந்து, 11, 12 வகுப்புகளில் வெறும் 51 விழுக்காடாகக் கட்டெறும்பான கதைதான். இப்பொழுது அய்ந்து, எட்டாம் வகுப்பிலும் அரசு பொதுத் தேர்வு என்றால், அதன் வீழ்ச்சியின் எல்லையை கணக்கிடவே முடியாது.
‘‘சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே’’ எனும் மனுதர்மம் - மத்திய பா.ஜ.க.வின் மேற்பார்வையில், தமிழ்நாட்டில் அண்ணா பெயரில் உள்ள அகில இந்திய அண்ணா தி.மு.க. ஆட்சியில், கோலோச்சுகிறது என்பது வெட்கக்கேடு! ‘வினாசகாலே விபரீதப் புத்தி’ - இன்னும் ஒன்றரை ஆண்டு இடைவெளியில் தேர்தலைச் சந்திக்கும் அண்ணா தி.மு.க. தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக் கொள்ளப் போகிறதா?
இதில் இழப்பதற்கு பி.ஜே.பி.க்கு ஒன்றும் இல்லை. கடும் இழப்பு ஆளும் அ.இ.அ.தி.மு.க.வுக்குத்தான் என்று எச்சரிக்கிறோம். அன்று ஆச்சாரியார் கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தின் மறுபதிப்பான இந்தப் புதிய கல்வித் திட்டத்தை - தந்தை பெரியார் மண், திராவிட பூமி ஒருபோதும் ஏற்காது - அனுமதிக்கவும் செய்யாது என்று எச்சரிக்கை செய்திருக்கிறார்.