குடும்பத்துக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் ..? எடப்பாடிக்கு ஸ்டாலின் வேண்டுகோள்.

தமிழக மக்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற வேண்டிய தலையாய பொறுப்பு அரசுக்குள்ளது என்பதை உணர்ந்து, இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில், ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5000 நேரடிப் பண உதவி, கூட்டுறவு நகைக்கடன்கள் - விவசாயக் கடன்கள் ரத்து, மின்கட்டண சலுகை உள்ளிட்டவை வழங்க வேண்டுமென முதல்வரை ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.


ஊரடங்கின் கோரப்பிடியில் சிக்கிய அடித்தட்டு மக்கள்- ஏழை எளியவர்கள் எவ்வித வருமானமும் இன்றி, தேவைப்படும் எதையும் வாங்கும் சக்தியை இழந்து தவித்துக் கொண்டிருக்கிறார்கள். திட்டமிடப்படாத ஊரடங்கு அறிவிப்பால்- மாவட்டங்களில் முன்கூட்டியே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காததால்- இன்றைக்குத் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் கொரோனா “கொத்துக் கொத்தாக” பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

ஆகவே மாவட்டங்களில் வாழ்வாதாரப் பிரச்சினை அச்சமூட்டும் வடிவம் எடுத்து- வருமான இழப்பு வரலாறு காணாத வகையில் ஏற்பட்டிருக்கிறது. இப்படியொரு நெருக்கடியான சூழலில் இன்று கூடும் தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5000 ரூபாய் பண உதவி வழங்குவது, கூட்டுறவுச் சங்கங்களில் உள்ள அனைத்து நகைக்கடன்களையும் ரத்து செய்வது, விவசாயிகளின் கடன்களை ரத்து செய்வது- கொரோனா காலத்திற்கு வீட்டுப் பயன்பாட்டிற்கான மின் கட்டணத்தில் சலுகை அறிவிப்பது,

சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கும்- தொழில் நிறுவனங்களுக்கும் மின்கட்டண சலுகை அளிப்பது, மாணவர்களின் அனைத்து செமஸ்டர் தேர்வுகளையும் ரத்து செய்வது ஆகியவற்றைப் பரிசீலித்து மேற்கண்ட கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும என்று ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.