ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன், 8 மணி நேரத்திற்கு பிறகு மீட்கப்பட்டுள்ள சம்பவமானது ராஜஸ்தானில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன்! சில மணி நேரங்களில் உயிருடன் மீட்ட அதிகாரிகள்! நெகிழ்ந்த பெற்றோர்!
ராஜஸ்தான் மாநிலத்தில் ஷிரோஹி என்ற மாவட்டம் அமைந்துள்ளது. அங்குள்ள ஒரு கிராமத்தில் 5 வயது சிறுவன் விளையாடி கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராவிதமாக அருகிலிருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துவிட்டான்.
சிறுவனின் அலறல் சத்தத்தை கேட்டவுடன் உறவினர்கள் பதறி அடித்துக்கொண்டு வந்து பார்த்தனர். உடனடியாக தீயணைப்பு படையினருக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு படையினர் 15 அடி ஆழத்தில் சிக்கிய குழந்தையை மீட்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்த மாவட்டத்தின் ஆட்சியரான சுரேந்திர குமார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணிகளை மேற்பார்வை பார்த்து வந்தார்.
சுமார் 8 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அந்த குழந்தை ஆழ்துளை கிணற்றில் இருந்து பத்திரமாக வெளியே எடுக்கப்பட்டது. தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த மருத்துவ வசதிகளின் மூலம் அந்த குழந்தைக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.
பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் குழந்தையை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு குழந்தைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சம்பவமானது ராஜஸ்தான் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.