400 இடங்களில் 17-ல் 24 மணி நேரப் போராட்டம்- மக்கள் மேடை அறிவிப்பு

தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் செயற்பாட்டுக் குழு கூட்டம், அருட்தந்தை இருதயா அருட்கடல் தலைமையில் இன்று நடைபெற்றது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:


குடியுரிமைத் திருத்தச்சட்டம்- சி.ஏ.ஏ., என்.பி.ஆர்., என்.ஆர்.சி.க்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று அரசியல் கட்சிகளும் அரசியல் சாரா அமைப்புகளும் பலவகையான போராட்டங்களை கடந்த மூன்று மாதங்களாக நடத்திவருகின்றனர்.

தமிழக மக்கள் ஒற்றுமை மேடையும் தனது பங்கிற்கு மாபெரும் மனிதசங்கிலி இயக்கத்தையும் மகத்தான குடியுரிமைப் பாதுகாப்பு மாநாட்டையும் நடத்தியது. அப்படியும் அதிமுக அரசு செவிசாய்க்கவில்லை.

என்.பி.ஆர் குறித்த சந்தேகங்களை எழுப்பி மாநில அரசு அனுப்பிய கடிதத்திற்கு மத்திய அரசிடமிருந்து இன்னும் பதில் வராததால் அதன் பணிகள் நிறுத்தி வைக்கப்படுவதாக அமைச்சர் உதயகுமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். ஆனால் இது பற்றி சட்டமன்றத்தில் கேட்கப்பட்டதற்கு அப்படி ஏதும் சொல்லவில்லை என்று மறுத்துவிட்டார்.

முதலமைச்சரும், மக்களின் போராட்டங்களைக் கொச்சைப்படுத்தும்வகையில் அவை எதிர்க்கட்சிகளின் தூண்டுதலால் நடைபெறுகின்றன என்று கூறியிருக்கிறார். மேலும் மாநில அரசானது இந்தப் பிரச்னை அனைத்து மக்களின் குடியுரிமை பிரச்னை என்று பார்ப்பதற்கு பதிலாக ஏதோ இஸ்லாமியர்களின் பிரச்னை என்பதுபோல பாகுபடுத்திப் பார்க்கும்போக்கைக் கடைப்பிடிக்கிறது.

இது நியாயமற்றது. ஆட்சியாளர்களின் இத்தகைய முன்னுக்குப் பின் முரணான பேச்சுக்களை மேடையின் செயல்பாட்டு குழு வன்மையாக கண்டிக்கிறது. வறட்டுப் பிடிவாதத்தில் இருக்கும் அதிமுக அரசை வழிக்குக் கொண்டுவர அடுத்தகட்டப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது என இக்கூட்டம் முடிவு செய்தது.

ஏற்கனவே அறிவித்தபடி மார்ச் 17ஆம் தேதி காலை 10 மணி முதல் 24 மணிநேர தொடர் இருப்புப் போராட்டம் தலைநகர் சென்னையிலும் மாவட்ட மற்றும் தாலுக்கா தலைநகர்களில் நடைபெறும். சுமார் 400 இடங்களில் நடக்கவிருக்கும் இந்த போராட்டத்தை அரசியல் கட்சிகளும் கட்சி சாரா அமைப்புகளும் மக்களும் ஆதரிக்க வேண்டும்.

தமிழகத்தின் இத்தனை ஊர்களில் நடைபெறும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்கும் வெகுமக்கள் திரள் கண்டாவது மாநில அரசு சி ஏ ஏ, என்பிஆர், என் ஆர்சி க்கு எதிராக ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடுக்கும் என நம்புகிறோம். அதற்கு மாறாக என் பிஆர் ஐ தமிழகத்தில் நடைமுறைபடுத்த அரசு துணிந்தால் ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்குவது என்றும் இக்கூட்டம் முடிவு செய்தது. 

இவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் பேரா. அருணன், க. உதயகுமார் ஆகியோர், அறிக்கை ஒன்றில் இதைத் தெரிவித்துள்ளனர்.